பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சீனிவாசன் போட்டியிட உள்ளார். அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள சீனிவாசன் பேசுகையில், ‘நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. வெற்றியடைந்து மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறங்க உள்ளார். தேர்தல் களத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.