This Article is From Sep 21, 2019

President: தஹில் ரமணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்!

தஹில் ரமணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

President: தஹில் ரமணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்!

தஹில் ரமணியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமணி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். 

இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் (Bilkis Bano) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது. 

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளையும் அவர் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில், தஹில் ரமணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தற்காலிக பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

.