This Article is From Apr 04, 2020

தனியார் மருத்துவமனைகளில் தயாராகும் கொரோனா வார்டுகள்: விஜயபாஸ்கர் தகவல்

போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தனியார் மருத்துவமனைகளில் தயாராகும் கொரோனா வார்டுகள்: விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா வார்டுகளை அமைக்கும் தனியார் மருத்துவமனைகள்: விஜயபாஸ்கர் தகவல்

ஹைலைட்ஸ்

  • கொரோனா வார்டுகளை அமைக்கும் தனியார் மருத்துவமனைகள்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 68 பேர் உயிரிழப்பு

அரசு கோரிக்கையை ஏற்று தனியார் மருத்துவமனைகள் கொரோனா வார்டுகளை அமைத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மொத்தமாக 68 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 601 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி தப்லீக் ஜாமத் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமானது. இதேபோல், மகாராஷ்டிராவை தொடர்ந்து, தமிழகத்திலே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 309-ஆக இருந்த நிலையில் நேற்றைய தினம் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி மருத்துவமனைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. தொற்று பரவாமல் தடுக்க தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி வருகிறது.

ராயப்பேட்டையில் இன்று கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் 4,500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 17 இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன. கூடிய விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிருமி நீக்க நடவடிக்கை எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கு செய்வோம். தயாரிப்பு, முன் தடுப்பு நடவடிக்கை அனைத்தையும் செய்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கையாக அனைத்துத் துறைகளையும் சேர்த்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். 

போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு கோரிக்கையை ஏற்று தனியார் மருத்துவமனைகள், கொரோனா வார்டுகளை அமைக்கிறது என்றார்.

தொடர்ந்து, அவரிடம் கொரோனாவுக்கு 2வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விழுப்புரம் 2-வது பலி ஏற்பட்டுள்ளதா என்பதைப் பற்றி அரசு முறைப்படி தெரிவிக்கும் என்றார். 

முன்னதாக, டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 51 வயது நபர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

.