ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் என பிரியங்கா கூறியுள்ளார்.
Amethi, Uttar Pradesh: தோல்வி பயத்தால் ராகுல் காந்திக்கு மத்திய பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக, பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக புதிய பிரச்னையை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கிளப்பியுள்ளார். ராகுல் காந்தி தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று தான் இயக்குனராக இருந்த பேக்காப்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களை தாக்கல் செய்தபோது, அவற்றில் குறிப்பிட்டுள்ளார் என்று சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்திருக்கிறார். இதனை விசாரித்துள்ள உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், ராகுல் காந்தி இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்ய வேண்டும். சுப்ரமணியசாமி அளித்துள்ள புகார் குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து பிரியங்கா காந்தி என்.டி.டி.வி.க்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது-
ராகுல் காந்தி இங்குதான் பிறந்தார் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். தேர்தல் தோல்வி பயம் காரணமாக மத்திய அரசு இப்போது நோட்டீஸை ராகுக்கு அனுப்பி இருக்கிறது. எங்களுக்கு தேர்தல் தோல்வி பயம் ஏதும் இல்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்க கூடாது என்பதில்தான் நாங்கள் கவனமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநில வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால்தான் வயநாடு தொகுதியை ராகுல் தேர்வு செய்திருப்பதாக பாஜக விமர்சித்து வருகிறது.