This Article is From Aug 13, 2020

“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்

“என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும்"

“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்

"இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அவமானம்”

ஹைலைட்ஸ்

  • 'இந்தி தெரியாததால் இந்தியரா எனக் கேட்கப்பட்டது'- கனிமொழி
  • விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கனிமொழி கூறியுள்ளார்
  • கனிமொழிக்கு இந்தி தெரியும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து கனிமொழி, தன் ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம், இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இந்தியர்தானா?' எனக் கேட்டார். எப்போதிலிருந்து இந்தியராக இருப்பதென்றால், இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறி #hindiimposition என்கிற ஹாஷ் டேக்கை பதிவிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் பாலிசியில் இல்லை' என்று விளக்கம் அளித்துள்ளது. அதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை அடுத்துப் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 

அதே நேரத்தில், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு” என சர்ச்சையான பதிவை ட்விட்டரில் இட்டிருந்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ள கனிமொழி, “என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும். நாடாளுமன்றத்தில் நான் பல உறுப்பினர்களுடன் பழகி வருகின்றேன். அவர்கள் எல்லோருக்கும் எனக்கு இந்தி தெரியாது என்பது நன்றாகத் தெரியும். 

இதையெல்லாம் தாண்டி, இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அவமானம்” என்றுள்ளார். 

.