This Article is From Mar 23, 2020

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஒருமாத நிதியுதவியை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்திய அளவில் உள்ள 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஒருமாத நிதியுதவியை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 'தனிமைப்படுத்தப்பட்டு' கண்காணிக்கப்படுகிறார்கள் - மு.க.ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஒருமாத நிதியுதவியை வழங்க வேண்டும்
  • 'தனிமைப்படுத்துவது' மட்டுமே இந்த நோய் அதிகம் பரவாமல் தடுக்கும்.
  • பள்ளித்தேர்வுகளை தொடர்ந்து நடத்துவதும் ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் - அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஒருமாத நிதியுதவி - ஏழை எளிய மக்களுக்கான ரேஷன் பொருட்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'கொரோனா' வைரஸால் தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 'தனிமைப்படுத்தப்பட்டு' கண்காணிக்கப்படுகிறார்கள். 

இந்திய அளவில் உள்ள 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் அரசு முழு வீச்சில் களமிறங்கி - மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

'தனிமைப்படுத்துவது' மட்டுமே இந்த நோய் அதிகம் பரவாமல் தடுக்கும். எனவே, அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியில் செல்வது, வெளியிடங்களுக்குப் போவது, கூடுவதை சுயமாகத் தவிர்த்தல் ஆகியவை மூலம் நாம் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

“சட்டமன்றத்தை நடத்துவேன்” என்று பிடிவாதம் பிடித்ததும்; பள்ளித்தேர்வுகளை தொடர்ந்து நடத்துவதும் ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல! 

கல்வி நிலையங்களை மார்ச் 31-ம் தேதிவரை மூடினாலும் - தேர்வுகள் வைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் பணிக்கு அழைத்தது தவறான அணுகுமுறை! இவையெல்லாம் அரசின் அலட்சியத்திற்கு ஓர் அடையாளம்.

இவற்றையெல்லாம் சரிசெய்து கொண்டு தமிழக அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என இன்னமும்கூட நம்புகிறேன். தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள 500 கோடி ரூபாய் நிதியுதவி இதற்கெல்லாம் போதாது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்து - அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதியுதவி, ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதுதான் 'தனிமைப்படுத்துதல்' முயற்சிக்கு வலுசேர்க்கும்.

இதை மனதில் வைத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட அறிவுறுத்தியிருக்கிறேன்.

சுய ஒழுக்கத்திலும், சுய கட்டுப்பாட்டிலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கிடும் தமிழக மக்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் செயல்பட்டு - வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்த்து - ஆங்காங்கே கூட்டம் கூடுவதை அறவே தவிர்த்திட வேண்டும் என்று ஒவ்வொருவரையும் இரு கரம் கூப்பி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

.