This Article is From Feb 18, 2019

முடிவுக்கு வருகிறதா புதுச்சேரி பஞ்சாயத்து; இன்று மாலை முதல்வர்-ஆளுநர் சந்திப்பு!

39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்

முடிவுக்கு வருகிறதா புதுச்சேரி பஞ்சாயத்து; இன்று மாலை முதல்வர்-ஆளுநர் சந்திப்பு!

சில நாட்களுக்கு முன்னர் கிரண்பேடி எழுதிய கடிதத்தை ஏற்க முடியாது எனக்கூறி, முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தை தொடர்ந்தார்.

ஹைலைட்ஸ்

  • கடந்த ஒரு வார காலமாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் நாராயணசாமி
  • கிரண் பேடி, போராட்டத்தை கைவிடுமாறு தொடர்ந்து கேட்டு வந்தார்
  • இந்நிலைநில், இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்

வளர்ச்சித் திட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டைப் போடுவதாகக் கூறி, அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆளுநர் மாளிகையின் முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்தார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் கறுப்பு சட்டை அணிந்து கிரண் பேடியின் வீட்டு முன்பாக இரவில் படுத்து உறங்கி போராட்டம் நடத்தினார் நாராயணசாமி. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு வருவதாக நாராயணசாமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

அவருக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக NDTV-க்கு அவர் அளித்த பேட்டியில், “நரேந்திர மோடியின் தூண்டுதலின்பேரில் கிரண்பேடி இந்த வேலைகளை செய்து வருகிறார். சதிக்கு மோடிதான் காரணம். ஒவ்வொரு நாளும் எங்களது அரசுக்கு கிரண் பேடி பிரச்னை அளித்து வருகிறார்'' என்று கூறினார்.

நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு கிரண்பேடி தரப்பிலிருந்து, ‘நள்ளிரவில் வீட்டின் முன்பாக படுத்து உறங்கும் போராட்டத்தை உங்களைப் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தலாமா?' என்று கிரண் பேடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் மேலும், ‘கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தின் பதிலுக்கு காத்திருக்காமல், முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும், இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு எமது அலுவலகத்துக்கு வாருங்கள்' என்று நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தார்.

கிரண்பேடி எழுதிய கடிதத்தை ஏற்க முடியாது எனக்கூறி, முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தை தொடர்ந்தார். மேலும் அவர், மக்கள் பிரச்னையை தீர்க்க தடையாக உள்ள ஆளுநருக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை திசைத் திருப்ப முயற்சி; ஆளுநராக இருக்க கிரண் பேடி தகுதியற்றவர் என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு இந்தப் போராட்டம் நடந்து வந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி இன்று மீண்டும் பேச்சுவார்த்தை அழைப்பு விடுத்துள்ளார். இம்முறை, ‘இன்று மாலை விவாதிக்கலாம். அலுவலகம் வாருங்கள்' என்று கூறியுள்ளார். அந்த அழைப்பை நாராயணசாமியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர், ‘கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன். மக்கள் பிரச்னை முக்கியம் என்பதால் 39 கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்' என்று கூறியுள்ளார். 
 

.