மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலால் வலைதளங்களில் நெட்சன்களின் கடும் கண்டனத்திற்கு மத்திய அமைச்சர் ஆளாகியுள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில், கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்த குமாரும் ஒருவர். அவரது சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம், வசந்த குமாரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அமைச்சர், ‘'வசந்த குமாரின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கிறது. உங்களைப் போன்றவர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் அமைதியாக வாழ முடிகிறது'' என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அவர் எடுத்த செல்பி நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கமென்ட் செய்தவர்கள், ‘'நல்ல கேமராவை பயன்படுத்தி செல்பி எடுங்கள். உங்கள் கேவலமான முகத்தை பார்க்க முடியவில்லை'' என்று கூறியிருந்தார்.
இன்னொருவர் ‘ஹிட்லர் பாணியில் கன்னந்தானம் செயல்படுவதற்கு இந்த செல்பி ஓர் உதாரணம்' என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொருவர், ‘நாடகம் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல' என்று கூறியுள்ளார். இதுபோன்று கன்னந்தானத்தை விமர்சித்து கமென்டுகளும், மீம்ஸ்களும் குவிந்து வருகின்றன.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வயநாட்டை சேர்ந்த வசந்த குமாருக்கு மனைவியும், தாயும், 2 குழந்தைகளும் உள்ளனர்.