This Article is From Feb 23, 2019

‘’இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது’’- ட்ரம்பின் பேச்சால் பதற்றம்

புல்வாமா தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் தணித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • புல்வாமா தாக்குதல் குறித்து 2-வது முறையாக கருத்து கூறியுள்ளார்
  • இரு நாடுகளும் பகைமையை தணிக்க வேண்டும் என்கிறார் ட்ரம்ப்
  • புல்வாமா தாக்குதல் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது
Washington:

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

புல்வாமா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இருநாட்டு பிரச்னையில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொள்வோம். புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இந்தியா தனது வீர்ர்களை இழந்து நிற்கிறது. அதன் வலியை நான் புரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

pt4v27ag

 

ஏற்கனவே புல்வாமா தாக்குதல் குறித்து ட்ரம்ப் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலைமை மோசமாக இருக்கிறது என்று ட்ரம்ப் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன், சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர்.

 

மேலும் படிக்க - “பாகிஸ்தான் ஆட்ட‌ம் குறித்து சாஹல் கருத்து!

.