உத்தர பிரதேசம், பிகார், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இ.வி.எம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து வாகனம் மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்படியான ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.
வரும் வியாழக் கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ வெளியானது கேள்விகளை எழுப்பியுள்ளது.
சந்தவ்லி நாடாளுமன்றத் தொகுதியில், ஓர் வாகனத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டு, அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் வைக்கப்படும்படியான வீடியோ காட்சி ஒன்று இன்று காலை வெளியானது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள், ‘எதற்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இப்போது இறக்கி வைக்கப்படுகின்றன' என்று கேள்வி எழுப்பினர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பு, சந்தவ்லி தொகுதிக்கு உட்பட்ட 35 ரிசர்வ் இ.வி.எம் இயந்திரங்கள்தான் இறக்கி வைக்கப்பட்டன. இயந்திரங்களை வைப்பதில் சிக்கல் இருந்ததால், அது இப்போது செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, ரிசர்வ் இ.வி.எம் இயந்திரங்களும் மற்ற இயந்திரங்கள் வைக்கப்படும் போதுதான் வைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும் காசியாபூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அஃப்சல் அன்சாரி, வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றுவதற்கான வேலை நடக்கிறது என்று சொல்லி தர்ணாவில் ஈடுபட்டார். போலீஸாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.
காசியாபூர் மற்றும் சந்தவ்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வாக்குப் பதிவு நடந்தது.
கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள தோமாரியாகஞ்ச் தொகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் ஓர் வாகனம் நிறைய இ.வி.எம் இயந்திரங்களை ‘சுற்றி வளைத்துப் பிடித்தனர்' சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சியினர். இதற்கு பின்னணியில் இருப்பது பாஜகதான் என்றும் இரு கட்சிகளும் குற்றம் சாட்டின.
இதைப் போன்ற குற்றச்சாட்டுகள் ஜான்சி, மாவ், மிர்சாபூர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் பிகாரின் சில இடங்களில் இருந்தும் எழுந்துள்ளன.
பிகாரில் ராஷ்டிரய ஜனதா தளம் கட்சி, மகாராஜ்கஞ்ச் மற்றும் சாரன் தொகுதிகளில் இ.வி.எம் இயந்திரங்கள் இடமாற்றம் நடைபெறுவதாக குற்றம் சாட்டியது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் ட்விட்டர் மூலம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்தக் குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பயிற்சி நோக்கிற்காக அந்த இ.வி.எம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன என்று விளக்கம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இ.வி.எம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபிஏடி வாக்குச்சீட்டு இயந்திரங்எளின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் உட்பட நாட்டின் 21 எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் பரபரப்பு வீடியோ மற்றும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.