ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலந்தே வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் தனியார் ரிலையன்ஸ் நிறுவனத்தை அனுமதித்ததன் மூலம் பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை பிரதமர் மோடி நடத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் ரகத்தை சேர்ந்த 36 போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்திருந்த மத்திய அரசு இது தொடர்பாக பிரான்ஸ் நிறுவனமான டஸால்டுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அதேநேரம் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலமாக விமானத்தின் உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்கிற முக்கிய அம்சமும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தியாவில் பாகங்களை தயாரிப்பது யார் என்று டஸால்ட் நிறுவனம் முடிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்காமல், தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபன்ஸுக்கு பிரதமர் மோடி வழங்கி விட்டார் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலந்தே கூறியதாக ஒரு தகவலை வெளியிட்டு பிரான்ஸ் பத்திரிகை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த தகவலில், டஸால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை ஆக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்தார் என ஹாலந்தே கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து இந்திய பாதுகாப்பு படைகள் மீது ரூ. 1.3 லட்சம் கோடி அளவுக்கு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்தியுள்ளனர்.
இந்திய ராணுவத்தினர் சிந்திய இரத்த தியாகத்தை பிரதமர் மோடி அவமானப்படுத்தி விட்டார். இந்திய மண்ணுக்கு மோடி துரோகம் செய்து விட்டார் என்று கூறியுள்ளார்.