கர்நாடகாவில் மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக அரசியலில் மாநில ஆட்சியை பொறுத்தவரையில் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. இதே கூட்டணி தற்போது மக்களவை தேர்தலிலும் நீடிக்கிறது.
இங்கு மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 19-லும், மதசார்பற்ற ஜனதா தளம் 9 தொகுதிகளிலும் போட்டியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கவுடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதசார்பற்ற ஜனதா தளத்தை பொறுத்தவரையில் அவர்கள் 12 தொகுதிகள் வரை கேட்டதாகவும், காங்கிரஸ் தரப்பில் 9 அல்லது 10 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை என்.டி.டி.வி.-க்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா அளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,'' எங்களது நோக்கம் முழுமையும் தேர்தலில் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு கூடுதலாக தொகுதிகளை ஒதுக்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை'' என்று தெரிவித்தார்.
இரு கட்சிகளும், மைசூர், தும்கூர், சித்ரதுர்கா ஆகிய தொகுதிகளில் கண்ணாக உள்ளன. இதனால் தொகுதிப் பங்கீடு செய்வது காலதாமதம் ஆகும் என கருதப்படுகிறது.