மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்பது 'ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவது போன்றது' என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆர்பிஐ வசம் தற்போது, ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த உபரி நிதியில் 14 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் குழு தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த அறிக்கையில், மத்திய அரசுக்கு 3 முதல் 5 ஆண்டுகளில் தவணை முறையாக உபரி நிதியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, நேற்று கூடிய ஆர்பிஐ மத்தியக் குழுக் கூட்டத்தில் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில், நிதியாண்டு 2018-19ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள நிதியில் 1,23,414 கோடியும் மேலும் மறு பொருளாதார முதலீடு வரைவில் (இசிஎப்) கூடுதலாக உள்ள 52,637 கோடியையும் சேர்த்து மொத்தம் 1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, பிரதமரும், நிதிஅமைச்சரும் அவர்கள் உருவாக்கிய பொருளாதார சீரழிவை எப்படி தீர்ப்பது என்ற வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்காக ஆர்பிஐ-யிடம் இருந்து பணத்தை திருடுவது தற்போதைய பிரச்சனையை தீர்க்க உதவாது. இது, மருந்தகத்தில் இருந்து, ஒரு பேண்டேஜை திருடி துப்பாக்கிக் குண்டுக் காயம் ஏற்ப்பட்டவருக்கு ஒட்டுவது போல என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்வீட்டர் பதிவில், ரிசர்வ் வங்கியால் அரசுக்கு வழங்கப்பட்ட ரூ.1.76 லட்சம் கோடி என்பது, 2019 பட்ஜெட் அறிவிப்பில் கிட்டத்தட்ட அதே அளவு தொகை இடம்பெறாமல் இருந்தது.
அப்படி என்றால், அந்த பணம் எங்கு செலவழிக்கப்பட்டது? எதற்காக அந்த தொகை பட்ஜெட்டில் இடம்பெறாமல் இருந்தது? ரிசர்வ் வங்கியை இதுபோன்று கொள்ளையடிப்பது நமது பொருளாதாரத்தை மேலும் அழிக்கிறது. மேலும், இது வங்கியின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கிறது என காங்கிரஸ் கடுமையாக சாடியிருந்தது.