This Article is From Mar 27, 2019

‘உலக தியேட்டர் தின வாழ்த்துகள்!’- மோடிக்கு "வாழ்த்து" தெரிவித்த ராகுல்!

தேர்தல் சமயத்தில் மோடியின் இந்த உரை, மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது

‘உலக தியேட்டர் தின வாழ்த்துகள்!’- மோடிக்கு

இந்தியா தற்போது முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது- மோடி

New Delhi:

‘மிஷன் சக்தி' வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கும், ‘உலக தியேட்டர் தின' வாழ்த்துகளை கூறினார். 

இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, ‘மிஷன் சக்தி திட்டம் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி. நாம் எல்லோரும் இது குறித்து பெருமைப்பட வேண்டும். தரை வழியாக, நீர் வழியாக மற்றும் ஆகாய வழியாக மட்டுமல்ல, இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. 

இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம். இந்தியா தற்போது முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது' என்றார். 

தேர்தல் சமயத்தில் மோடியின் இந்த உரை, மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. இதையொட்டி ராகுல் காந்தி, ‘வெல் டன் டி.ஆர்.டி.ஓ. உங்களின் பணியை நினைத்து பெருமை கொள்கிறேன். அதேபோல பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலக தியேட்டர் தின வாழ்த்துகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன்' என்று கேலி செய்யும் விதத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

ராகுல் காந்தியைத் தவிர்த்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும், பிரதமர் மோடியின் உரையை விமர்சித்துள்ளனர்.

அகிலேஷ், ‘இன்று நரேந்திர மோடி, டிவியில் தோன்றி, தேசம் சந்தித்துள்ள முக்கியப் பிரச்னைகளை திசைத் திருப்ப முயன்றுள்ளார். நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, கிராமப்புற பிரச்னைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்' என்று கூறினார்.

மம்தா, ‘தேர்தல் நேரத்தில் மோடி அரங்கேற்றி வரும் டிராமாவின் தொடர்ச்சியே இன்று ஆற்றிய உரை. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும்' என்று கறாராக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

.