இந்தியாவில் தடுப்பு காவல் மையம் இல்லை என்றும், நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் திட்டமும் இல்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி அவரது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, ஆர்எஸ்எஸ்-ன் பிரதமர் தாய் நாட்டிடம் பொய்களை கூறியதாக ராகுல் கூறியுள்ளார். மேலும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோவையும், அசாமில் தடுப்பு காவல் மையம் கட்டப்பட்டதற்கான ஊடக தகவலையும் அந்த ட்வீட்டர் பதிவில் அவர் இணைத்துள்ளார். மோடி கூறியது பொய் என்பதை தெரிவிக்கும் வகையில், #Jhoot #Jhoot #Jhoot என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவு செய்துள்ளார்.
குடியுரிமை பதிவேடு குறித்த பிரதமர் மோடியின் கருத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்கள் தடுப்பு காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சில நக்சல்கள் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை. குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடியுரிமை பதிவேடும், இந்திய முஸ்லிம்களுக்கு பொருந்தாது. என்று அவர் அந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த 2014ல் எங்கள் ஆட்சி வந்தது முதல் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் நடைபெறவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்தே அசாமில் அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பதே 130 கோடி மக்களுக்கும் நான் சொல்ல விரும்புவது என்று அவர் 97 நிமிட பேச்சின் போது கூறினார்.
இந்திய குடிமக்களின் பதிவேட்டை அமல்படுத்துவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது மதத்தை குடியுரிமைக்கான அளவுகோலாக மாற்றும் முதல் சட்டமாகும்.
முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் நாட்டில் மதத் துன்புறுத்தல்கள் காரணமாக 2015க்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால் அவர்கள் இந்திய குடிமக்களாக மாற இந்த சட்டம் உதவும் என்று அரசு கூறுகிறது. இது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.