பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Modi) எதிராக, "Chowkidar Chor Hai" எனும் வாக்கியத்தைப் பயன்படுத்தியதற்காக ராகுல் காந்தி (Rahul Gandhi) மீது போடப்பட்டிருந்த அவதூறு வழக்கு, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் (Rafale Deal) தொடர்பாக எந்த விசாரணையும் தேவையில்லை' என்ற முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு தீர்ப்பையும் தந்திருந்தது. இதனால் பாஜக தரப்பினர், ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் மீதும் பாய்ச்சலுடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரஃபேல் தீர்ப்பு தொடர்பாக புதிய விவாதத்தைக் கிளப்பும் வகையில் ராகுல் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தில், பல்வேறு ஊழல் நடந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சசர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10ல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று 36 ர ஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோருடன் ரஃபேல் தீர்ப்பில் நீதிபதி ஜோசப் ஒப்புக் கொண்டாலும், “மனுதாரர்கள் சிபிஐ அமைப்பை அணுகி, வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய முறையிடலாம். சிபிஐ, அரசிடம் அனுமதி பெறும் பட்சத்தில் இந்நடவடிக்கையில் இறங்கலாம்,” என்று தெரிவித்தார்.
இதை முன்வைத்து ராகுல், “ரஃபேல் ஊழல் தொடர்பாக மிகப் பெரிய கதவைத் திறந்து வைத்துள்ளார் நீதிபதி ஜோசப். இனி முழு வீச்சில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊழலை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்,” என்று பகீர் கிளப்பும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.