உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டில் சென்ற வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பலர் கொல்லப்பட்டனர். அப்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீரட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வாகனங்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளது போலீஸ் தரப்பு.
கடந்த வாரம் மீரட்டில் நடந்த போராட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.
டெல்லியிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மீரட். அங்கு பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கார் மூலம் பயணம் செய்துள்ளனர் ராகுல் மற்றும் பிரியங்கா. ஆனால், தற்போது வாகனத்தையும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர் காவல் துறை தரப்பு.
“எங்களை போலீஸ் தடுத்து நிறுத்திய பின்னர், உங்களிடம் எதாவது ஆணை இருக்கிறதா என்று கேட்டோம். அதற்கு அவர்கள், எங்களிடம் எந்த ஆணையும் இல்லை, ஆனால், தயவு செய்து திரும்பி சென்று விடுங்கள்,” என்று கேட்டனர் என ராகுல் காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
ராகுல் மற்றும் பிரியங்காவிடம் இன்னொரு நாள் மீரட்டில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்க்கவும் என்று போலீஸ் கூறியுள்ளதாம். காங்கிரஸ் தரப்போ, வெறும் 3 பேர் மட்டும் குடும்பத்தினரை சந்தித்து விட்டு வருகிறோம் என்றார்களாம். அதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லையாம்.
பிஜ்னோரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேற்று நேரில் சென்று சந்தித்தார் பிரியங்கா காந்தி.
வெள்ளிக்கிழமை மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள், போலீஸ் மீது கற்களை வீசியுள்ளனர். அதைத் தொடர்ந்து காவல் துறை தரப்பு தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டத்து.
மீரட்டில் வன்முறைக்குப் பிறகு இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உத்தர பிரதேசங்களில் நடந்த போராட்டங்களில் 15 பேர் வரை உயிரழந்துள்ளார்கள்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.