பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், "நமது பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, தனது 68வது பிறந்தநாளை இன்று வாரணாசியில் கொண்டாட உள்ளார். அங்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
வாரணாசியில் இன்று தரையிறங்கியவுடன் பிரதமர் நரூர் கிராமத்துக்குச் செல்ல உள்ளார். அங்கு பள்ளி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவார். இதையடுத்து அவர் காசி வித்யாபீத் மாணவர்களுடன் கலந்து பேச உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் பிறந்தநாளுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘நாட்டை முன்னேற்றப் பாதையில் கட்டமைக்க மிகத் தீவிரமாக உழைக்கும் பிரதமர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமரின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் #HappyBdayPMModi, #HappyBirthDayPM ஆகிய ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.