சமீபத்தில் லடாக்கில் நடைபெற்ற இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்தியா சீனாவில் சில மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்தது.
மேலும், பல சீன நிறுவன கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை பல மாநில அரசுகள் ரத்து செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது, 44அதிவேக "வந்தே பாரத்" ரயில்களை உருவாக்கும் டெண்டரை இந்தியா ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் புதிய டெண்டருக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு நிறுவனம் டெண்டரை எடுப்பதை உறுதிசெய்ய ரயில்வே ஆர்வமாக உள்ளதாகவும், சீன கூட்டு முயற்சி இந்த திட்டத்தில் உள்ளது என்று உணர்ந்தவுடன், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ஐசிஎப் தொழிற்சாலை ஜூலை 10 ஆம் தேதி டெண்டரை தொடங்கியது. இந்த டெண்டரில் சீனாவை தளமாகக் கொண்ட சி.ஆர்.ஆர்.சி யோங்ஜி எலக்ட்ரிக் கம்பெனி லிமிடெட் மற்றும் குருகிராம் சார்ந்த ஃபில்-மெட் பிரைவேட் லிமிடெட் ஆகியவையுடன் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், பாரத் இண்டஸ்ட்ரீஸ், சங்ரூர், எலக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், மேதா சர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பவர்நெடிக்ஸ் எக்யூப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என 5 நிறுவனங்களும் பங்கேற்றது.
தொடர்ச்சியான சீன நிறுவனங்களின் பங்களிப்பினை மத்திய அரசு தடுத்துவருவது சீனாவுக்கு தரும் பதிலடியாக பார்க்கப்படுகிறது.
With inputs from PTI