ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு இரண்டாவது முறையாக வலியுறுத்தியும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மறுத்து வருவது தொடர்பாக, இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் அசோக் கெலாட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரின் நடத்தை குறித்து பிரதமரிடம் நேற்றைய தினம் பேசினேன். ஆளுநர் எங்களுக்கு மீண்டும் 6 பக்க காதல் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போது ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் சட்டமன்ற கூட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், அதற்கு தேதி குறிப்பிடாதது, காரணம் குறிப்பிடாதது என்று 6 காரணங்களையும் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக அனுப்பிய கோப்புகளில், ஜூலை 31ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பொருளாதாரம் குறித்தும் விவாதிக்க உள்ளதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.