ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, நீதிமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கடுமையாக மோதிக்கொண்ட சச்சின் பைலட், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் பைலட் தனது ட்விட்டர் பதிவில், ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி.ஜோஷியின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிருப்தி எம்எல்ஏக்களை ஏன் தகுதி நீக்க செய்யக்கூடாது என கடந்த ஜூலை 15ம் தேதி சபாநாயகர் அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் சபாநாயகர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், சபாநாயகருக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பலம் உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், ஜனநாயகத்தில் "எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது" என்றும் தெரிவித்தது.
இதனிடையே, திங்களன்று சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழக்கை திரும்ப பெற்றார்.
தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அவரது இரண்டு வேண்டுகோள்களையும் நிராகரித்ததால், அங்கு பரப்பரப்பு ஏற்பட்டு வருகிறது.