பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிற்கும், இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் எல்லை பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணமகனான மகேந்திர சிங், இவர் பாகிஸ்தானின் அமர்கோட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய இருந்தார். இதற்காக சனிக்கிழமையன்று தனது திருமணத்திற்கு செல்ல தார் எக்ஸ்பிரஸில் செல்ல முன்பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் அத்தாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகோர் வரை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் நிலவி வருவதால், ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மகேந்திர சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, விசா பெறுவதில் பல சிக்கல்கள் கண்டோம். நான் பாகிஸ்தான் செல்ல விசா பெறுவது தொடர்பாக அமைச்சர் கஜந்திர சிங்கை தொடர்பு கொண்டேன். அவர் மூலமாகவே 5 பேருக்கு விசா எடுக்க முடிந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்படுகளையும் செய்துவிட்டோம், அழைப்பிதழ்கள் உறவினருக்கு வழங்கிவிட்டோம் என்று கூறினார்.
எனினும், இருநாட்டுக்கிடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மார்ச் 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த பதற்றம் அதிகரிக்க முக்கிய காரணமாக, இந்திய விமானப்படை பாகிஸ்தான் பாலகோட்டில் புகுந்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு மீது தாக்குதல் நடத்தியது. இதேபோல், பாகிஸ்தான் தரப்பும் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றது. இதில் பாகிஸ்தான் போர் விமானமான f-16 இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மேலும் படிக்க - "புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்!"