ஹரியானாவின் மானேசரில் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு நேற்று மாலை ராஜஸ்தான் போலீசார் சென்றுள்ளனர். சுமார் 20 நிமிடம் அங்கு காத்திருந்த நிலையிலும், அந்த சொகுசு விடுதியின் வாயில் கதவுகள் திறக்கப்படாததால், போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக ராஜஸ்தான் போலீஸார் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படும் சொகுசு விடுதிக்கு சென்று திரும்பியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்றும் போலீசார் இதேபோல், ஐடிசி பாரத் கிரண்ட் விடுதிக்கு சென்று திரும்பினர். தொடர்ந்து, ஹரியானா போலீசார் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அசோக் கெலாட் ஆட்சியை வீழ்த்துவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு குழுவினர் விசாரித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, எம்எல்ஏ பன்வர் லால் ஷர்மாவின் குரல் மாதிரியைப் பெற அவர்கள் வெள்ளிக்கிழமையன்று சொகுசு விடுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹரியானா போலீசார், ராஜஸ்தான் போலீசாரின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இறுதியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டபோதும், அங்கிருந்து ஒரு சில நிமிடங்களில் ராஜஸ்தான் போலீசார் கிளம்பியதாக கூறுகின்றனர்.
கடந்த வாரம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் மானேசாரில் உள்ள இரண்டு சொகுசு விடுதியில் தங்கி வருகின்றனர்.
ஆட்சியை கலைப்பதற்காக பாஜகவுடன் பேரம் பேசியதாக சச்சின் பைலட் மீது எழுந்த குற்றச்சாட்டில், முதல்வர் அசோக் கெலாட்டின் உத்தரவின் பேரில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதைத்தொடர்ந்தே இந்த மோதல் போக்கு தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை காங்கிரஸ் தலைமை பறித்தது.