ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்போம் என சச்சின் பைலட் அணியினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் சட்டப்பேரவையை கூட்டக்கோரி முதல்வர் அசோக் கெலாட் பல முறை கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இறுதியாக நேற்றைய தினம் ஆகஸ்ட் 14ம் தேதி சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, டெல்லியில் உள்ள சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்ப தங்களுக்கு பாதுகாப்பு கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, நிச்சயம் நாங்கள் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் என்று ஜெய்ப்பூர் வருகின்றனர் என்ற தகவல்கள் தெரியவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்வில்லை என்றால், அவர்கள் தானாகவே தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
அவர்கள் தற்போது, சபாநாயகர் தங்களை தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். கடந்த ஜூன் 15ம் தேதி சபாநாயகர் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸூக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, சபாநாயகர் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றபோதிலும், இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தங்கள் வசம் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் தரப்பு முயற்சித்து வருகிறது.