தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டிப் பல அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைப் பலரும் உற்று நோக்குகிறார்கள். இரு திராவிடக் கட்சிகளைத் தவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, நாம் தமிழர் கட்சி என பலர் களத்தில் நிற்கின்றனர்.
ரஜினி, ஏப்ரல் மாதம் தனது புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும் பாஜக முகாம் பக்கமே ரஜினி சாய்வார் என்றும் சலசலக்கப்படுகிறது. அவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பெருமை பொங்க பேசி வருவாதலேயே, ‘பாஜகவுடன்தான் கை கோர்ப்பார் ரஜினி' என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர், 2021 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிதான் அமையும் என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து எஸ்.வி.சேகர், “ரஜினி கூறியதுபோல பாஜக ஆட்சி அமையும் என்று எஸ் வி சேகர் கூறிய காட்சிகள் எடிட் செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. ஊடக அதர்மம்,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.