ரஜினி தவறாக பேசவில்லை; அவர் சலசலப்புக்கு அஞ்சமாட்டார் - எச்.ராஜா
ரஜினி தவறாக எதுவும் பேசவில்லை என்றும் அவர் சலசலப்புக்கு அஞ்சமாட்டார் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்றார்.
அத்துடன், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெரியார் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ரஜினிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது, ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மேலோட்டமாக ஒரு சம்பத்தை குறிப்பிட்டதற்கே, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, சமூக நீதி கோணத்தில் இருந்து பெரியாரை பார்க்க தொடங்கினால், பெரியாரின் போராட்டங்களை அவரால் புரிந்துக்கொள்ள முடியும். சமூகநீதியை வென்றெடுக்க அவர் ஏராளமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அப்படி போராடியவரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றன. சங் பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகி விடுவார் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறியுள்ளார்.