This Article is From Jan 23, 2020

பெரியார் சர்ச்சை எதிரொலி: ரஜினியின் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிப்பு!!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனை மன்னிப்புகேட்டு திரும்பப் பெறாவிட்டால் ரஜினி வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியார் அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தன.

Advertisement
தமிழ்நாடு Written by

பெரியார் குறித்து பேச்சுக்கு தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பெரியார் குறித்து பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியுள்ள நிலையில், அவரது  வீட்டைச்  சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியார் அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தன. இந்த சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ரஜினியின் வீட்டிற்கு செய்யப்பட்டுள்ளது.

துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

Advertisement

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பெரியார் அமைப்புகள், இந்த பேச்சிற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரது இல்லம் முற்றுகையிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் நேற்று ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Advertisement

இதனால் இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரியார் அமைப்புகள் ரஜினியின் இல்லத்தை முற்றுகையிடக் கூடும் என்பதால் அவரது இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறு பரப்பியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலைக் கழகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement