பிரபல நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்டை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வனப்பகுதியில் சுற்றித் திரியும் கிரில்ஸ் அங்கு கிடைக்கும், பூச்சிகள், ஊர்வன உள்ளிட்டவற்றை சாப்பிட்டு அங்கேயே தங்குவார். வனத்திற்குள் அவர் செய்யும் சாகசங்கள் பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அவர் எப்படி இந்த அசாதாரண சூழலில் தங்கியிருந்து, தனது உயிரை காப்பாற்றிக் கொள்கிறார் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவுக்குள் மோடியை பிரில்ஸ் அழைத்துச் சென்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி படு உற்சாகத்துடன் கலந்து கொண்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை வைத்து, நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார் கிரில்ஸ். இதற்காக கர்நாடகத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினி பங்கேற்றபோது அவரது தோளில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்திப்பூர் உயிரியல் பூங்கா கடந்த 1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடியை வைத்து கிரில்ஸ் நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது தனது இளமைக்காலம், தேநீர் விற்றது, இளைஞனாக இருந்தபோது இமயமலைக்கு தனியாக சென்றது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி சுவாரசியமாக பேசியிருந்தார்.
இதுகுறித்து பேட்டியளித்திருந்த கிரில்ஸ், 'பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சி நடத்தியதை நான் கவுரவமாக கருதுகிறேன். இந்தியாவின் வனப்பகுதிக்கும், அழகுக்கும் நான் ஒரு ரசிகன். நிலப்பரப்பு மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களையும் எனக்கு பிடிக்கும். இந்தாண்டு இன்னும் பல நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நாங்கள் இந்தியா வருகிறோம்' என்று கூறியிருந்தார்.