This Article is From Sep 17, 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பால் புதிய திருப்பம்!

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பால் புதிய திருப்பம்!

உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட மற்றவர்களின் குடும்பங்கள், குற்றவாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, புதிய மனு தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை.

ஆனால் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு பயன்படுத்தி கொல்லப்பட்ட போது, அருகில் இருந்த 14 பேரும் கொல்லப்பட்டனர். அப்படி இறந்தவர்களின் குடும்பங்கள், தொடர்ந்து எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

ஆளுநரை நேரில் சந்திக்கவும் அவர்கள் நேரம் கேட்டிருந்தனர். இந்நிலையில் தான், இந்த விவகாரம் குறித்து புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 3 வாரத்தில் இந்த புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

.