This Article is From Jul 09, 2019

மாநிலங்களவை தேர்தல்: அன்புமணிக்கு எதிராக திமுக போட்ட ஸ்கெட்ச்?

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் வைகோ உட்பட 7 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அன்புமணிக்கு எதிராக திமுக போட்ட ஸ்கெட்ச்?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகிய 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு சீட்டையும் திமுக ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

இதேபோல் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாமகவுக்கு ஒரு சீட்டை அதிமுக ஒதுக்கியது. அதன்படி, பாமக சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஒருவேளை வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் ஒருவரை நிறுத்த திமுக முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்.ஆர்.இளங்கோ திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எனக்காக மட்டும் தான் ராஜ்யசபா சீட் ஒதுக்கியது. நான்தான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, திமுக சார்பில் ஒருவரை வேட்பு மனு தாக்கல் செய்யும்படி கூறினேன். நிச்சயம் எனது மனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனையில் வைகோ உட்பட 7 பேரின் மனுவையும் ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ வேட்புமனுவை திரும்பப் பெறுகிறாரா அல்லது அன்புமணி ராமதாஸூக்கு போட்டியாக தொடர்ந்து, திமுக-வால் போட்டியட வைக்கப்படுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.