முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா, நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, தேவகவுடா போட்டியிடப் போவதாக அவரது மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி எம்எல்ஏக்கள், தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களது கோரிக்கையை ஏற்று தேவகவுடா, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். நாளை அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். எல்லோரது வேண்டுகோளை ஏற்று போட்டியிடவிருக்கும் தேவகவுடாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேவகவுடா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படவுள்ளார்.
முன்னதாக 1996-ல் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் இந்தியாவின் பிரதமர். அதன்பின்னர் தற்போதுதான் தேவகவுடா மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.
ஜூன் 19-ம்தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் கர்நாடகாவில் நடைபெறுகிறது. இதில் பாஜக தரப்பில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரசுக்கு 68 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களால் எளிதாக ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே நிறுத்தப்பட்டுள்ளளார்.
கார்கேவை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து மற்ற எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவகவுடாவுக்கு காங்கிரஸ் வழங்கும்.
44 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் கர்நாடகாவில் இருந்து ஒருவர் மாநிலங்களவைக்கு செல்ல முடியும். தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 34 உறுப்பினர்கள் உள்ளனர். அவர், காங்கிரஸ் ஆதரவு உறுப்பினர்களுடன் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.