This Article is From Nov 10, 2018

சிபிஐ விவகாரம்: ராகேஷ் அஸ்தானாவின் பகீர் தகவல்!

சிபிஐ-யின் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா, தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார்

வரும் ஞாயிற்றுக் கிழமையுடன், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு அளித்த காலக்கெடு முடிகிறது

New Delhi:

சிபிஐ-யின் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா, தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ-யின் இயக்குநராக இருந்த அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது பிரதமர் அலுவலகம்.

தற்போது, அலோக் வெர்மா மற்றும் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.

முன்னர் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மீது மத்திய விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணையை 2 வார காலத்துக்குள் நடத்தி முடித்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரணையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' இவ்வாறு நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தன் மீதான லஞ்ச புகார் விசாரணை ஆணையத்திடம் அஸ்தானா, ‘எனக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காலத்தில் நான் இந்தியாவிலேயே இல்லை. அப்போது நான் லண்டனில் இருந்தேன்' என்று தனது தரப்பு வாதத்தைத் தெரிவித்துள்ளார்.

சனா சதீஷ் பாபு என்பவர் தான், அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடமும் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சனா, ‘அஸ்தானா தான் என்னிடம் லஞ்சப் பணம் வாங்கினார்' என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

வரும் ஞாயிற்றுக் கிழமையுடன், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு அளித்த காலக்கெடு முடிகிறது. இதையடுத்து திங்கள் கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

.