This Article is From Sep 08, 2019

பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்!

கடந்த 2017ம் ஆண்டு தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டார். இன்னும் சில நாட்களில் தனது 96வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் அவர் காலமானார். 

பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்!

டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். (File)

New Delhi:


பிரபல மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 95.

பாகிஸ்தானின் சிந்தி பகுதியில் கடந்த 1923ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணியாற்றினார்.

இதன்பின் மும்பை தொகுதியில் இருந்து பாஜகவின் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெத்மலானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார்.

கடந்த 2017ம் ஆண்டு தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டார். இன்னும் சில நாட்களில் தனது 96வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் அவர் காலமானார். 

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேலவை எம்.பி.சுப்பிரமணியசுவாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராம் ஜெத்மலானியின் மறைவு பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ராம் ஜெத்மலானியின் சிறந்த விசயங்களில் ஒன்று அவர் தனது மனதில் உள்ளவற்றை பேசும் ஆற்றல் கொண்டவர். எந்தவித அச்சமும் இன்றி அதனை செய்து வந்தவர்.

அவசரநிலை காலங்களில் பொதுமக்களின் சுதந்திரத்திற்காக அவர் போராடிய விசயங்கள் நினைவு கூரத்தக்கவை.  தேவையானோருக்கு உதவுவது என்பது அவரது தனித்தன்மையில் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கியது.

அவருடன் உரையாட எண்ணற்ற சந்தர்ப்பங்கள் அமைந்தது எனது அதிர்ஷ்டம் என்றே நான் நினைத்து கொள்கிறேன்.  இந்த சோக தருணங்களில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

அவர் இங்கு இல்லையென்றாலும் அவரது சிறந்த பணிகள் உயிர்ப்புடன் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.