சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ‘தவழும் சிக்கன்' வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் ஒரு தட்டு நிறைய சமைக்கப்படாத இறைச்சி இருப்பது தெரிகிறது. திடீரென்று ஒரு இறைச்சித் துண்டு மட்டும் தட்டிலிருந்து தவழ்ந்து, தரையில் பொத்தென்று விழுகிறது. இறைச்சி நகருவதைப் பார்க்கும் பின்னால் இருக்கும் நபர்கள் பயத்தில் அலறுவதும் வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இது உண்மையா பொய்யா என்கிற விவாதம் எழத் தொடங்கியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் தளமான ஸ்னோப்ஸ் (Snopes), இந்த வீடியோ முதன்முதலாக கடந்த ஜூன் மாதம் சீன சமூக வலைதளங்களில் வைரலானது என்கிறது. அதைத் தொடர்ந்து பல ஆங்கில செய்தி நிறுவனங்களும், இந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்டனவாம். ஆங்கில செய்தி நிறுவனங்கள் பலவும், இறைச்சித் துண்டு கோழியினுடையது என்று சொல்கின்றன. அதே நேரத்தில் ஹாங்காங் நியூஸ், அது ஒரு தவளையினுடையது என்கிறது.
அந்த இறைச்சி கோழியினுடையதா, தவளையினுடையதா அல்லது வேறு உயிரனத்தினுடையதா என்கிற விவதாம் ஒரு புறமிருக்க, அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஜான் வீன்ஸ், “ஒரு தவளை எப்படி அதைச் செய்யும் என்று எனக்குத் தெரிவில்லை. கண்டிப்பாக அது தவளையாக இருக்க வாய்ப்பில்லை. அது ஒரு மீனாக அல்லது வேறு எதாவதாகக் கூட இருக்கும்” என்கிறார்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்:
அந்த இறைச்சி அப்படி தவழ்வதற்கான காரணம் பற்றி சைன்டிஃபிக் அமெரிக்கன் என்கிற ஆன்லைன் தளம், “ஒரு உயிரனம் இறக்கும்போது அதன் நியுரான்கள் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிடாது. அவை இயங்கும்போது, உயிரனத்தின் தசைகள் அசைவது சகஜம்தான். அவை சில மணி நேரம் இயங்கிவிட்டுத்தான் ஓயும்” என்று விளக்கம் கொடுக்கின்றது.
இந்த மொத்த வீடியோவும் பொய்யானது என்றும் ஒரு கும்பல் ஆன்லைனில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.