திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 7 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாநில தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டது. டிசம்பர் 27, 30-ந்தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் மனுதாக்கல் 9-ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாதங்களையும், தமிழக அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
அதன்படி, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஊராட்சி தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும்.‘
மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. மேலும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநரகாட்சி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 7 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாநகராட்சி பட்டியலினத்தவரில் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.