சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுடன் அமமுக கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை மதத்தின் அடிப்படையில் அணுகாமல், மனிதநேயத்தின் அடிப்படையில் மத்திய அரசு கையாளவேண்டும் என வலியுறுத்துகிறேன். பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் விரோத பழனிசாமி கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என்றார். ரஜினி, கமல் யாரும் கூட்டணி குறித்து தன்னிடம் பேசவில்லை.
தேர்தல் நடைப்பெற கால அவகாசம் உள்ளதாகவும், அப்போது அதுக்குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அதிகார வர்கத்தின் இடையூறுகளை தாண்டி அமமுக பதிவு பெற்ற அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஆசி பெறவே இங்கு வந்தோம் என்றார்.
மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்ததை ஏற்க முடியாது என்று கூறிய அவர், பதிவு பெற்ற கட்சிக்கே சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.இருப்பினும் தங்கள் வழக்கறிஞர் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளதாகவும், நாளை நீதிமன்றம் செல்ல உள்ளோம் என்றும் கூறினார்.