This Article is From Jul 31, 2019

இந்தியாவில் ஓர் ‘பாகிஸ்தான்’ காலனி… பிரதமர் மோடி வரை நீளும் உத்தர பிரதேச பிரச்னை!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து சிலர், உத்தர பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு குடி பெயர்ந்தனர்.

இந்தியாவில் ஓர் ‘பாகிஸ்தான்’ காலனி… பிரதமர் மோடி வரை நீளும் உத்தர பிரதேச பிரச்னை!

அந்த பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒரே கோரிக்கை, ஏரியா பெயர் மாற்றம்தான்.

Greater Noida:

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இருக்கிறது ‘பாகிஸ்தான் வாலி காலி' என்னும் காலனி. தங்களது பகுதிக்கு இருக்கும் பெயரினால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளவாதாக சொல்லும் அப்பகுதி மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து சிலர், உத்தர பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு குடி பெயர்ந்தனர். அதைத் தொடர்ந்துதான் அப்பகுதிக்கு ‘பாகிஸ்தான் வாலி காலி' என்ற பெயர் வந்தது. 

“நாங்களும் இந்தியர்கள்தான். எங்களின் மூதாதையர்களில் 4 பேர்தான் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து குடியேறினார்கள். ஆனால், எங்கள் ஆதார் கார்டில் கூட பாகிஸ்தான் வாலி காலி என்றுதான் அச்சிடப்பட்டுள்ளது. நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். பிறகு ஏன் பாகிஸ்தான் பெயரைச் சொல்லி எங்களை மட்டும் பிரிக்கிறார்கள். எங்கள் மூதாதையர்களில் சிலர் பாகிஸ்தானில் இருந்து வந்தது எங்களது பிழை கிடையாது” என்று அப்பகுதிவாசி ஒருவர் நம்மிடம் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். 

“ஆதார் கார்டை காண்பித்தப் பிறகு கூட எங்களுக்கு யாரும் வேலை தர தயாராக இல்லை. நாங்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். எங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் கூட அவர்களுக்கும் வேலை கிடைக்காது. பிரதமர் மற்றும் முதல்வர்களுக்கு எங்களது ஏரியாவின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம். எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்று அந்த பகுதியைச் சேர்ந்த பூபேஷ் குமார் கூறுகிறார். 

இன்னொரு பகுதிவாசி, “நாங்கள் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்களைப் போன்று எங்களை இங்கிருக்கும் மக்கள் நடத்துகின்றனர். இது எல்லாவற்றுக்கும் காரணம் ‘பாகிஸ்தான் வாலி காலி' என்கிற பெயர்தான். மோடிஜி மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. அவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். 

பாகிஸ்தான் வாலி காலியில் சுமார் 60 முதல் 70 வீடுகள் இருக்கின்றன. அந்த பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒரே கோரிக்கை, ஏரியா பெயர் மாற்றம்தான். அப்படி மாற்றப்படும் பட்சத்தில் மற்றவர்கள் தங்களை கேலி செய்யாமல் இருப்பார்கள் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். 


 

.