பல முறை முயற்சித்தும் துப்பாக்கியில் இருந்து சப்தம் கூட வரவில்லை.
Supaul: பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட முயற்சித்தபோது 22 துப்பாக்கியில் ஒன்று கூட சுடவில்லை.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார்.
மிஸ்ராவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சுபால் மாவட்டத்தில் உள்ள பாலுவா பஸார் பகுதியில் நடந்தது. பின்னர் அங்கு அவர் தகனம் செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் என்பதால் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.
தகனம் செய்யப்படும் போது போலீசார் வானத்தை நோக்கி 22 முறை (மூன்று ரவுண்டுகளாக) சுடுவது வழக்கம். நேற்றும் அதேபோல போலீசார் துப்பாக்கியை தூக்கி விசையை அழுத்தியுள்ளனர். ஆனால், ஒரு துப்பாக்கியும் வெடிக்கவில்லை. பல முறை முயற்சித்தும் துப்பாக்கியில் இருந்து சப்தம் கூட வரவில்லை.
இது குறித்து பதிலளித்த ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ பிப்ரா யதுவன்ஷ் குமார் யாதவ் பீகார் முன்னாள் முதல்வரை அவமதித்ததாகவும் இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.