This Article is From Apr 01, 2020

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து: ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளையும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து: ராமதாஸ்

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து
  • கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது.
  • அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக போக்குவரத்துக்கும், அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆலைகள் இயக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சந்தையில் அவற்றின் வரத்துக் குறைந்து, அதன் காரணமாக விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று எட்டாவது நாள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது. மளிகைக் கடைகளிலும், அரிசி மட்டும் விற்பனை செய்யும் கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது. 

இத்தகைய சூழலில், தமிழகத்திலுள்ள அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆலைகள், மருத்துவத் துறையால் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, செயல்பட அனுமதிப்பதன் மூலமாகவும், அந்த ஆலைகளில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலமாகவும் மட்டும்தான் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்; தட்டுப்பாட்டையும் போக்க முடியும்.

ஊரடங்கு ஆணையை தமிழக அரசு சிறப்பாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மிகவும் நெருக்கடியான காலகட்டம் என்பதால், சூழலுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட சில கடுமையான நடவடிக்கைகளை ஓரளவு தளர்த்துதல், வேறு சில நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பொதுமக்களின் தேவைகளுக்கு அரசு எடுத்து வருகிறது.

ஊரடங்கு ஆணை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை ஆலைகள் மூடப்பட்ட நிலையில், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, தேயிலைக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில், தேயிலை ஆலைகளை திறக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தியும் விவசாயம் சார்ந்த பணிதான் என்பதாலும், அவை தான் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளையும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அந்த ஆலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் சரக்குந்துகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

.