டெல்லி ஐஐடி அருகே ஸ்பைஸ் ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் மர்ம கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை சேர்ந்தவர் விமானி யுவராஜ் திவாதியா, விமான கேப்டனான இவர், நேற்றிரவு 1 மணி அளவில் பாரிதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அலுவலக காரில் சென்றுள்ளார். அப்போது, டெல்லி ஐஐடி அருகே உள்ள பாலத்தில் 5 இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழி மறித்துள்ளது.
தொடர்ந்து, அவர்கள் யுவராஜின் கார் கண்ணாடியை உடைத்து, கதவை திறந்து துப்பாக்கி முனையை வைத்து விமானியை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பொருட்கள் மற்றும் ரூ.34,000 ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றுள்ளனர்.
டெல்லி ஐஐடி அருகே கார் கண்ணாடியை உடைத்து ஸ்பைஸ் ஜெட் விமானியிடம் வழிப்பறி
எனினும், செல்வதற்கு முன்பு அவர்கள் வைத்திருந்த கத்தியை வைத்து அவரை குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதன் பின்னர் யுவராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பான புகைப்படங்களில், விமானியின் கார் இருக்கைகள் ரத்தம் படிந்து கிடக்கிறது. உடைந்த கண்ணாடி துண்டுகள் கார் இருக்கையில் சிதறி கிடக்கின்றன.
இந்த ரத்தம் படிந்த காரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், சமீப நாட்களாக ஐஐடி டெல்லியில் இதேபோல், தொடர் வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கொரோனா வைரஸ் லாக்டவுன் சூழ்நிலையிலும் அத்தியாவசிய சேவைகளில் உள்ள பணியாளர்கள் நள்ளிரவிலும் தங்களது பணிக்கு செல்லும் போது அவர்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஆர்யாவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.