கன்னியாஸ்திரியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் பிரான்கோ முலக்கல் இன்று ஜலந்தரை அடைந்தார். நேற்று கேரள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரான்கோ பஞ்சாப் மாநில போலீஸாரின் பாதுகாவலில் ஜலந்தரை அடைந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஜலந்தர் பகுதியின் பிஷப்பாக இருந்தவர் பிரான்கோ. ஜலந்தரை அடைந்ததும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி வரவேற்ற போது, அவர்களை பார்த்து பிரான்கோ புன்னகைத்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிரான்கோ, பஞ்சாப் மக்களின் பிரார்த்தனை தன்னை ஆதாரித்தது, வரும் நாட்களிலும் அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்வார்கள் என்று நம்புகிறேன். விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறேன். நான் சட்டத்திற்கு கட்டுபட்ட குடிமகன், நாட்டின் சட்ட அமைப்பை நம்புபவன் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மூன்று வார காலம் கேரள சிறையில் இருந்த பின்னர், நேற்று நிபந்தனை ஜாமீனில் பிரான்கோ விடுவிக்கப்பட்டுள்ளார். பிரான்கோ அவருடைய பாஸ்பேர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மேலும்,கேரளாவிற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஜலந்தரை அடைந்த பிரான்கோவை மலர்தூவி, மாலை அணிவித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளார்கள்.