புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்; பிரதமரிடம் மம்தா கோரிக்கை!
Kolkata: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல், உணவில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல், போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து, பலர் சாலை விபத்துகளிலும், பசியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய அரசு அவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து கொடுத்தது. இதைத்தொடர்ந்து, லட்சக்கணக்கானோர் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, கொரோனா பெருந்தொற்றால் கற்பனை செய்ய முடியாத இன்னல்களை மக்கள் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்கும் ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பி.எம். கேர்ஸ் நிதியை இதற்காகப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் காரணமாக கற்பனைக்கு எட்டாத விகிதத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் உள்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும் பிரதமர் நிவாரண நிதியின் ஒருபகுதியை இதற்காகப் பயன்படுத்தலாம் என்றும் பானர்ஜி சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். முன்னதாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.3,100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில், ரூ.2 ஆயிரம் கோடி வெண்டிலேட்டர்கள் வாங்கவும், ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வளர்ச்சிக்கு ரூ.100 கோடியை பயன்படுத்தவும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.