This Article is From Apr 04, 2019

பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி! - வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச்செல்லப்பட்டதா?

திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற அரசு பேருந்தில், கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி! - வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச்செல்லப்பட்டதா?

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பேருந்தில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அனாதையாக கிடந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் பறக்கும் படை அதிகாரிகள், பைகளில் இருந்து பணத்தை கைப்பற்றி, அங்கிருந்து எடுத்துச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பைகளில் இருந்த பணம் முழுவதையும் அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது, மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது. அந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

.