This Article is From Jan 02, 2019

ராமர் கோயில் குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன சொன்னது..?

ஜனவரி 4 ஆம் தேதி, ராமர் கோயில் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

ராமர் கோயில் குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன சொன்னது..?

அயோத்தியில் ராமஜென்ம பூமி உரிமை தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.

New Delhi:

ராமர் கோயில் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமர் கோயிலைப் பொறுத்தவரை, நீதிமன்றம் என்ன முடிவு சொல்கிறது என்பது தெரியாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது. சட்ட சாசனத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும்' என்று கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதில் கருத்து தெரிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. ‘2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, சட்ட சாசனத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்ட அனைத்து வித சாத்தியக்கூறுகளும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியது. எனவே, பிரதமரின் கருத்து திருப்தி அளிக்கிறது. நாட்டு மக்கள், பாஜக தனது பதவிக் காலத்தை முடிப்பதற்குள் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றனர். அதற்கு ஏற்றாற் போல் செயல்பட வேண்டும்' என்று கூறியுள்ளது. 
 

அயோத்தியில் ராமஜென்ம பூமி உரிமை தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் முன்னர் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்துதான் ஜனவரி 4 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றம் விசாரணை ஒரு புறம் இருந்தாலும், பாஜக-வின் சில உறுப்பினர்களும் வலதுசாரி அமைப்புகளும், ‘ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றன. 

.