சமூக வலைதளங்களில் (Social Media) பரப்பப்படும் வெறுப்பு உணர்வைத் தூண்டும் கருத்துகள், போலி செய்திகள் (Fake News), அவதுறான பதிவுகள் மற்றும் தேச விரோத செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் இறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்கள் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தலைமை நீதிமன்றம். ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் அனைத்து வழக்குகள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழக அரசு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள், ஒரு வழக்கு குறித்து தகவல் கேட்டால் அதைச் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது. இந்த வாதத்திற்கு அந்நிறுவனங்கள், “எங்களால் எந்த தகவலையும் தர முடியாது. அது நடைமுறைச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது. நாங்கள் அரசு அமைப்புகளுடன் இணைந்து மட்டுமே செயல்பட முடியும்,” என்று எடுத்துரைத்துள்ளன. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம், “அரசாங்கம், வீட்டு உரிமையாளரிடம் சாவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், அந்த உரிமையாளர், தன்னிடம் சாவி இல்லை என்கிறார்,” என்று கடுகடுத்தது.
இந்த மொத்த விவகாரத்தைப் பொறுத்தவரை ஒரு தரப்பு, அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இப்படிபட்ட ஒரு புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வரப் பார்க்கிறது என்று குற்றம் சுமத்துகிறது.
இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சமூக வலைதளங்கள் குறித்து விதிகள் வகுப்பது, குடிமக்களின் தனி நபர் உரிமையைப் பறிப்பதற்காக அல்ல. தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.