வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், செயல்தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கரை, பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார். கடந்த 30ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், மற்ற கேபினட் அமைச்சர்களுடன் ஜெய்சங்கரும் பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சரவையில் பொறுப்பேற்ற 6 மாதத்தில் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவைக்கு உறுப்பினராக வேண்டும். இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான ஜெய்சங்கர் இந்தியா - அமெரிக்கா மற்றும் இந்தியா-சீனா உறவுகளில் பெரும் பங்காற்றினார். அத்துடன் இந்தியா - அமெரிக்கா 2008 அணு ஆயுத ஓப்பந்தத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக 1985 முதல் 1988 வரை பணிசெய்தார்.
அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றினார். அப்போது இந்திய அமைதிப்படைக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலாளராக பணிப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த சுஷ்மா சுவராஜ், இந்த தேர்தலில் உடல்நலம் காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை.