"இன்று திமுக நடத்தும் போராட்டம், மத்திய அரசுக்கு எதிராக நகர்த்தும் அரசியல் காய் நகர்த்தல் மட்டுமல்ல..."
குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ-வுக்கு (CAA) எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக (DMK) தலைமையில் மாநில அளவில் மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தை விமர்சித்துள்ள பாஜகவின் எஸ்.வி.சேகர் (S.V.Sekar), “சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்கள் அவர்களின் வீட்டுக் கதவையும் வீட்டு பெட் ரூம் கதவையும் திறந்துவைத்து விட்டே தூங்க வேண்டும்,” என்று சவால் விட்டுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் மேலும் பேசிய அவர், “சிஏஏ சட்டம் என்பது என்ன? வெளிநாடுகளில் மத ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது. இது எப்படி இந்தியாவில் இருப்பவர்களுக்கு, இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கும். இந்தியக் குடிமகனாக நீங்கள் இருந்தால் இந்தச் சட்டத்தைப் பற்றி ஏன் கவலை கொள்கிறீர்கள்.
இன்று திமுக நடத்தும் போராட்டம், மத்திய அரசுக்கு எதிராக நகர்த்தும் அரசியல் காய் நகர்த்தல் மட்டுமல்ல. போராட்டத்தின் போது கலவரைத்தை ஏற்படுத்தி மாநிலத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலையச் செய்து ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் எப்படிபட்டவர்கள். அவர்கள் வீட்டை பத்திரமாக பூட்டி வைத்துக் கொண்டு, நாட்டைப் பற்றி கவலைப்படாதவர்கள். நாட்டில் யார் வந்தாலும் போனாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. அப்படிப்பட்டவர்கள் இரவு நேரங்களில் வீடுகளையும், அவர்களின் பெட் ரூம் கதவுகளையும் திறந்துவைத்து விட்டே உறங்க வேண்டும்,” என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் பற்றி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளது குறித்து பேசிய சேகர், “உதயநிதிக்கு ரஜினியைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. அவ்வளவு பெரிய நடிகரை கிழவன், பெருசு என்று சொல்வது சரியல்ல. நாளைக்கு உங்களுக்கும் வயதாகத்தான் போகிறது. அப்போது உங்களையும் ஒருவர் பார்த்து பெருசு என்றுதான் சொல்லப் போகிறார்,” என்று காட்டமாக பேசினார்.