சபரிமலை செல்லும் பெண்களக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தற்போது, 7 பேர் அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளதால் தற்போது இந்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிப்பதும் சரியாக இருக்காது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது புயலை கிளப்பும் விவகாரமாக சபரிமலை உள்ளது. அதனால், நாங்கள் எந்த வன்முறையை விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கருத்து தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பாதுகாப்பு வழங்க கோரி ரெஹ்னா பாத்திமா மற்றும் பிந்து அம்மானி ஆகியோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், இது ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பழைய நடைமுறையாகும்.
இதில் சமநிலை தேவை ஆகவே தற்போது உங்களுக்கு ஆதரவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது. இறுதியில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால், நாங்கள் உங்களைப் பாதுகாப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ல் வரலாற்று தீர்ப்பாக அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எப்போதும் கோயிலை சுற்றி நின்று போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் தரிசனம் மேற்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு வழக்கை, 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், பெண்கள் கோயிலுக்குள் செல்ல தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு வெளியான மறுநாள் சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த முறை தரிசனம் மேற்கொள்ள வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர். இந்த முறை, கோயிலுக்குள் பெண்கள் செல்வதை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். மேலும், கோயிலுக்குள் பெண்கள் செல்ல விரும்பினால் உச்ச நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெற்று கடிதத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து ரெஹானா பாத்திமா, பிந்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. தற்போதைய சூழலில் சபரிமலைக்கு பாத்திமா சென்று வர பாதுகாப்பு தர கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது. இந்த வழக்கு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அமர்வின் இறுதி தீர்ப்பை தொடர்ந்தே பெண் ஆர்வலர்கள் அனுமதிக்கப்படுவது குறித்த முடிவெடுக்க முடியும்.
சட்டம் உங்களுக்கு ஆதரவாக இருப்பதை நாங்கள் அறிவோம், அது எங்களுக்குத் தெரியும். ஆனால் செய்தித்தாள் அறிக்கைகள், இது மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினை என்று குறிப்பிடுகின்றன. மேலும் இந்த வழக்கை 7 பேர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனால், தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.