Sabarimala Review Petition Verdict: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கேரளா அரசு ஆதரவு தெரிவித்தது.
New Delhi:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தற்போதைக்கு தடை விதிக்கப்படவில்லை. எனினும், இந்த வழக்கை 7 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்று நூற்றாண்டுகளாக பெண்கள் வழிபட விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.
இதற்கு இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதேபோல், சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியமும், மக்களின் நம்பிக்கைக்கைகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறிவந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கேரள அரசு ஆதரவு தெரிவித்தது. இதனிடையே தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு நாள்களில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 65 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்து வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு பிப்ரவரி 6ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.