This Article is From Jun 04, 2019

’பாரதியாருக்கு காவி தலைப்பாகை’ 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தால் சர்ச்சை!

12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போன்ற படம் இடம்பெற்றுள்ளதால் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

’பாரதியாருக்கு காவி தலைப்பாகை’ 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தால் சர்ச்சை!

தமிழகத்தில் 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து நேற்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை பள்ளி கல்வி நிர்வாகம் வழங்கியது.

இதில், தமிழக அரசு மாற்றி அமைத்துள்ள புதிய பாட புத்தகங்கள் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 12ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டை பக்கத்தில் இடம்பெற்றுள்ள பாரதியார் படத்தில் அவரது தலைப்பாகையில் வெள்ளை நிறத்திற்கு பதிலாக காவி நிறம் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது.

மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி கூறும்போது, காவி மயமாக்கும் எண்ணத்தில் இவ்வாறு வெளியிட்டதாக கருதுவது தவறு. இது மாநில அரசு வெளியிட்ட புத்தகம். கல்வித்துறையில் அரசியலோ, மதமோ விளையாடுவதற்கு இடம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த அட்டைப்படத்தை வடிவமைத்தவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையிலேயே அந்த நிறங்கள் தரப்பட்டதாகவும், உள்நோக்கம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

.